புலிப்பாணி ஜாலத்திரட்டு 106 - 110 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 106 - 110 of 211 பாடல்கள்

106. தானென்ற வெள்ளாவி முன்னே வைக்க
    தயவான வெள்ளாவி வேகாதப்பா
கேனென்ற நெற்களத்தில் ராசிகுன்றும்
    குணமான உப்பதுவும் விளையாமற்றான்
தேனென்ற ராசியது குறையும் பாரு
    தெளிவான மீன்கரையில் மீன் கிட்டாது
ஆனென்ற கொட்டணத்தில் நெற்களெல்லாம்
    அப்பனே மசியாது கண்டு பாரே.

விளக்கவுரை :

வண்ணானின் வெள்ளாவியின் முன்னே இதனை  வைத்தால்  வெள்ளாவி  வேகாது. இதனையே நெற்களத்தில் வைத்தால் ராசி இருக்காது. உப்பளத்தில் வைத்தால் உப்பு விளையாது. மீன் பிடிக்கும் இடங்களில் வைத்தால் மீன்கள் வலையில் கிடைக்காது. நெல்கொட்டத்தினால் மசியாது. அது மட்டுமல்ல மேலும் -

107. பாரடா  நாவிதன்னை  சுட்ட கோலும்
    பண்பான  முளைசெதுக்கி  உகரம்  நாட்டி
சீரடா  வைங்காயக்  கருவும்  பூசி
    சிறப்பான  வெதிரிமலந்  தன்னிற்றாக்க
வீரடா  முன்பின்னு  மடைக்கும்  பாரு
    விதமாக  காரணமாய்ப்  போவானையா
கூறடா  முளைபிடுங்கி  நீரிற்  போடக்
    குணமாகு  மடிந்ததெலாம்  நிவர்த்தி  தானே.

விளக்கவுரை :

நாபியைச்  சுட்டகோலும்  முளைசெதுக்கி  அதில்  உகாரம்  நாட்டி,  ஐங்கோலக்  கருவையும்  பூசி  அதனைஎதிரியின்  மலத்தில்  போட்டால்  எதிரிக்கு  மலசலம்  அடைத்துக்  கொள்ளும்  வேதனையையும்  அனுபவிப்பான்.  உடனே  அந்த  முளையைப்  பிடிங்கி  தண்ணீரில்  போட்டு  விட்டால்  இவையெல்லாம்  நிவர்த்தியாகிவிடும்

சண்டை போட்டுக் கொள்ளும் ஜாலம்

108. தானென்ற  யீஞ்செடியில்  காக்கை  யென்ற
    தயவான  மூலிகையொன்  றென்ன  சொல்லுவேன்
ஊனென்ற  விலங்கையிலே  குரங்கு  மூலி
    உத்தமனே  மலைதோறு  முண்டு முண்டு
வானென்று  விருமூலி  வேணமட்டும்
    வகையாகப்  பிடுங்கிவந்து  சொல்லக்  கேளு
ஆனென்ற  யீஞ்செடியில்  காக்கை  மூலி
    அப்பனே  யொருகடைமேல்  சரக்கில்  வையே.

விளக்கவுரை :

ஈசஞ்செடியில்  அடியில்  வளர்ந்திருக்கும்  காக்கைப்  பூண்டு  என்கிற  மூலிகையும்,  விலங்குகளில்  குரங்கின்  பெயரைக்  கொண்டு  மலைகளில்  வளரும்  குரங்கு  மூலிகையும்  ஆகிய  இவ்விரண்டிலும்  தேவையான  அளவிற்க்குப்  பிடுங்கி  வரவும்.  அதன்  பின்னர்  செய்ய  வேண்டியதைக்  கூறுகிறேன்  கேள்.  இரண்டில்  ஒன்றாக  காக்கை  மூலியை  ஒரு  சரக்கில்  தடவி  ஒரு  கடையின்  மீது  வைத்துவிடு.

109. வையடா  யிலங்கையிற்  குரங்கை  யப்பா
    வளமான  ஒருசரக்கில்  வைத்துப்  போடு
பையவே  யாருக்குஞ்  காணா  மற்றான்
    பண்பாக  விரும்பிலே  பதித்துப்  போடு
ஐயையோ  யிதன்கொடுமை  சொல்லப்  போமோ
    அப்பனே  யிருகடைபா  ரடித்துக்  கொள்வார்
கையவே  தம்பியென்று  கூப்பிட்டாலும்
    கடுகி  வைதானென்றே  கண்டிப்பாரே.

விளக்கவுரை :

பின்னர்  குரங்கு  மூலிகையின்  சரக்கில்  தடவி  மற்றொரு  கடை  மேல்  வைத்துவிடு.  அப்படி  இல்லையெனில்  எவரும்  காணாதபடி  கடையின்  இரும்பின்  கீழ்வைத்து  புதைத்து  விடவும்.  இதனால்  ஏற்படும்  கொடுமையை  சொல்லத்தான்  முடியுமா  இரண்டு  கடைகாரர்களும்  ஒருவரை  ஒருவர்  அடித்துக்  கொள்வார்கள்.  இதெல்லாம்  வேண்டாம்  தம்பி  என்று  சொன்னால்  கடுமையான  மொழியில்  திட்டுகிறாயாஎன்று  சண்டை  போடுவார்.

மாடன்  ஏவல்  மந்திரம்

110. பாரடா  நஞ்சுண்டு  மரித்துப்  போன
    பரிவான  மனிதரைத்தான்  தகனம்  பண்ணிச்
சீரடா  காடாற்று  முன்னே  தானுஞ்
    சிறப்பான  கரியதிலே  யெடுத்துக்  கொண்டு
வீரடா  வைங்கோலக்  கருவைத்  தொட்டு
    விதமாக  வான்போல  மாடன்  கீறித்
தீரடா  முகமதுதான்  கதித்த  தாகத்
    திறமாகச்  சுவாலைதனி  லெழுதிப்  போடே.

விளக்கவுரை :

விசம்  உண்டு  இறந்துபோன  மனிதனை  சுடுகாட்டில்  தகனம்  செய்திருந்தால்  அவன்  எலும்புகளை  எடுத்து  ஆற்றில்  கரைப்பதற்க்கு  முன்னர்  எரித்த  இடத்திலிருந்து  கரியை  எடுத்துக்  கொண்டு  வந்து  அதில்  ஐங்கோலக்  கருவைப்  பூசி  ஆகாச  மாடன்  மந்திரத்தை  எழுதி  அதில்  எதிரியின்  முகம்  வீங்கி  விட்டது  என்று  எழுதி  தீயில்  போடவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar