புலிப்பாணி ஜாலத்திரட்டு 151 - 155 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 151 - 155 of 211 பாடல்கள் 
 


விளைச்சல்  பெருகிட

151. ஆமடா  நாயுருவி  காப்புக்  கட்டி
    அப்பனே  ஸ்ரீமென்று  லட்ச  மோதி
தாமடா  காடுசெந்நெல்  கரும்பு  வாழை
    தயவான  கொடிக்காலுந்  தென்னந்  தோப்பும்
நாமடா  ஐங்கோலக்  கருவும்  பூசி
    வளமாகக்  கலசத்திற்  புதைத்தா  யானால்
நாமடா  யிதுகளெல்லா  மதிகமாகும்
    நலமாக  போகருட  கடாட்சந்  தானே.

விளக்கவுரை :

விளைச்சல்  கெடுவதற்கு  கூறியது  போன்று  விளைச்சல்  பெருக  வழிமுறைகளைக்  கூறுகிறேன்.  நாயுருவிச்  செடிக்கு  காப்பு  கட்டி  "ஸ்ரீம்"  என்று  இலட்சம்  தடவைகள்  ஒதிவிட்டு,  அதற்கு  ஐங்கோலக்  கருவும்  பூசி  கலசத்தில்  வைத்து  மூடி,  காடு,  செந்நெல்  விளையும்  வயல்,  கரும்பு  தோட்டம்,  வாழைத்  தோட்டம்,  போன்ற  இடங்களில்  இக்கலசத்தை  புதைத்து  வைத்தால்  நன்கு  விளைந்து  பலனைக்  கொடுக்கும்.  இவையாவும்  போகருடைய  கடாட்சமாகும்.

பூதப்  பைசாச  விநோதம்

152. தானான  சொரித்தவளை  பிடித்து  வந்து
    தயவான  சாம்பிராணி  வேணமட்டும்
மானான  அதின்வாயிற்  செலுத்தி  வைத்து
    மைந்தனே  புகையூரத்  தலைகீழ்  கட்டி
வானான  மண்டலந்தான்  கடந்து  வாங்கி
    வளமாக  சாம்பிராணி  எடுத்துக்  கொண்டு
ஆனான  தலைமஞ்சங்  கொடியுங்  கூட்டி
    அடைவான  சாம்பிராணி  புகையும்  போடே.

விளக்கவுரை :

ஒரு  சொரித்  தவளையைப்  பிடித்து  வந்து  அதன்  வாயில்  எவ்வளவு  சாம்பிராணி  பிடிக்கிறதோ  அதனளவுக்கு  சாம்பிராணி  பிடிக்கிறதோ  அதனளவுக்கு  சாம்பிராணியைத்  திணித்து  அந்தக்  தவளையை  தலைகீழாகத்  கட்டித்  தொங்கவிட்டு  அதன்  கீழே,  புகை  மூட்டம்  போடவும்.  இதுபோன்று  நாற்பத்தெட்டு  நாட்கள்  புகையூரல்  போட்டு  பின்னர்  அதன்  வாயிலுள்ள  சாம்பிராணியை  எடுத்துக்  கொண்டு  அதில்  தலைமஞ்சங்  கொடியை  அரைத்து  அதில்  சேர்த்து  சாம்பிராணிப்  புகைப்  போடவும்.

153. போடப்பா  புகைபிடிக்க  பிசாசு  பூதம்
    பொங்கமுள்ள  தேவரொடு  முனிகருப்பன் 
நாடப்பா  பிர்ம  ராட்சதனும்  சாத்தான்
    நலமான  லாடன்  சப்பாணி  பின்னுங்
கூடப்பா  ஒமென்று  போட்டா  யானால்
    கொற்றவனே  தலைவிரித்  தாடும்  பாரு
ஆடப்பா  பெருகுஞ்  சொல்லு  மையா
    அப்பனே  புகையினுட  பெருமை  தானே.

விளக்கவுரை :

"ஒம்"  என்று  சொல்லி  சாம்பிராணிப்  புகைப்போட்டு  பிடிக்க  பிசாசு , பூதம் , தேவர் ,முனி ,கருப்பன் , பிரம  ராட்சதன் , சாத்தான் , லாடன் , சப்பாணி , இவைகளெல்லாம்  இந்தப்  புகையினால்  தலைவிரித்தாடும்.  இதனால்  உன்னைப்  புகழ்வார்கள்.  இது  அந்தப்  புகையின்  பெருமையாகும்.

புகைபோடல்  வித்தை

154. பெருமையான  யின்னமொரு  மார்க்கங்  கேளு
    பேணியே  மனிதாஸ்தி  கழுதை  யஸ்தி
அருமையாய்  மனிதருட  தண்டுச்  சீலை
    அப்பனே  மனிதர்மலம்  பன்றி  அஸ்தி
உரிமையாம்  காக்கணம்வேர்  சீந்தில்மேனி
    உத்தமனே  முட்டை  கொஞ்சஞ்  சேர்த்திடித்துத்
தெரிமையாய்ப்  புகைபோடத்  தேவர்  யாருந்
    திறமாக  வாடுவார்கண்  சீ ... யென்  றோதே.

விளக்கவுரை :

பெருமைபடும்படியான  இன்னொரு  ஜாலவித்தைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக  மனிதனுடைய  அஸ்தி  அதாவது  எலும்பு , கழுதையின்  எலும்பு , மனிதனுடைய  கோவணம் , மனிதனின் , மலம் , பன்றியின்  எலும்பு , காக்கணாம்  வேர் , சீந்தில்  தண்டு , குப்பை  மேனி , எரிமுட்டை  சிறிதளவு  இவைகளெல்லாம்  ஒன்றாகச்  சேர்த்து  உரலிலிட்டு  இடித்தெடுத்துக்  கொண்டு  அத்தூளில்  கொஞ்சம்  எடுத்து  " சீ ... "   என்று  சொல்லிப்  புகைப்போட்டால்  மனிதர்  முதல்  தேவர்கள்  வரை  ஆடுவார்கள்.

விநோத  ஜாலவித்தை

155. ஒதவே  யின்னமொரு  வித்தை  கேளு
    ஒளிவான  சிதம்பரத்தின்  பூசை  சொன்னோம்
கோதி  லுச்சாடனச்  சக்கரத்தைச்  கீறிக்
    கொற்றவனே  பிராமணரிற்  பிரம்மச்சாரி
ஆதரவா  யவன்  மறித்துத்  தகனமா
    மப்பனே  காடாற்று  முன்னே  தானும்
வாதாக  அஸ்தியொன்  றெடுத்து  வந்து
    வளமான  வஸ்து  வொரு  சேருவாங்கே.

விளக்கவுரை :

மற்றொரு  ஜாலவித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  பின்பகுதியில்  சிதம்பரப்  பூசையில்  உரைத்துள்ளபடி  உச்சாடன  சக்கரத்தைத்  தகட்டில்  கீறி  அந்தணரில்  பிரம்மச்சாரி  ஒருவர்  இறந்து  அவனை  சுடுகாட்டில்  எரித்து  தகனம்  செய்வதற்கு  முன்  சென்று  சுடுகாட்டில்  அவனது  எலும்பு  ஒன்றை  எடுத்து  வந்து  அத்துடன்  வஸ்து  ஒரு  சேர்  சேர்த்துக்  கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar