புலிப்பாணி ஜாலத்திரட்டு 51 - 55 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 51 - 55 of 211 பாடல்கள்

51. வையப்பா ஜாலக்காள் பூசை செய்து
    வளமான நீலகண்டி தியான மோது
கையப்பா  ஸ்ரீரீம்...... கிரீம்.......கிலியும்...... சவ்வும்
    கனிவான ஐயும்..... அவ்வு...... முவ்வுங் கூட்டி
அய்யமின்றி யவ்வுடனே கூகூவென்றே
    அடைவான நிலகண்டி யம்மா வென்று
பையவே லட்சமுரு செபித்தா யானாற்
    பாங்கான மையதுவு முயிரதாச்சே.

விளக்கவுரை :
எடுத்து வைத்துக் கொண்ட சிமிழை ஜாலக்கால் முன் வைத்து பூசை செய்யவும். பின்னா் நீலகண்டியை  நினைத்து தியானம் செய்யவும். தியானம் செய்யும் போது, " ஸ்ரீரீம்... க்ரீம்..... கிலியும்.... சவ்வும், ஐயும்.... அவ்வும், முவ்வும்..." என்று பயப்படாமல் உச்சாடனம் செய்யவும். அச்சமயம் மந்திரத்துடன் நிலகண்டியம்மா என்று லட்சம் தடவைகள் ஜெபிக்க வேண்டும். இப்போது சிமிழிலுள்ள மைக்கு ஆற்றல் உண்டாகும்.

52. ஆச்சப்பா நீலகண்டி பூசை செய்து
    அடைவாக மையெடுத் தாட்டக் கேளு
பாச்சப்பா நூலேணி யொன்று செய்து
    பாங்காக மேற்போடப் படியாய் நிற்கும்
வீச்சப்பா மை யெடுத்து கையில் தேய்த்து
    விதமாக மண்ணை யள்ளி திசையிற்போடு
கூச்சப்பா வெகுபடைகள் வருகு தென்று
    கூறுவாய் வெகுபடைகள் வருகும் பாரே.

விளக்கவுரை :

நீலகண்டி பூசை செய்து எடுத்துக் கொண்ட மையின் ஆற்றலைக் கூறுகிறேன் கேள். ஓரு நூலேணி செய்து அதன் மீது இந்த மையைத் தடவி உலறவைத்து எடுத்தால் அந்த நுலேணியில் ஓருவா் ஏறலாம். அந்தளவுக்கு உறுதியாக இருக்கும். இதே மையை எடுத்து கையில் தேய்த்து தரையிலுள்ள மண்ணை எடுத்து நான்கு திசைகளில் போட்டால் பெரும் படைகள் வருவது போன்று தெரியும்.

53. பாரடி நீலகண்டி யம்மா நீயும்
    பாங்காக நூலேணி தன்னைக் கொள்ளு
சாரடி யொன்று நூலேணி தன்னை
    சார்பாகச் சொல்லிநீ மேலே போடு
தீரடி யந்திரத்திற் சண்டை யாகத்
    தெளிவாகச் செய்யென்று தியான மோது
கூரடி படையெல்லாம் போகுதென்று
    குணமாகத் தானுரைக்கப் போகும் பாரே.

விளக்கவுரை :

நீலகண்டி தாயே, நூலேணி ஜாலத்தை கைக்கூட வையம்மா, என்று கூறி மேலே போட்டால் அது மேலே போடவும். மேலே அந்தரத்தில் நிற்கும். அச்சமயம் அந்தரத்தில் சண்டைகள் செய்யென்று தியானம் செய்தால் அந்தரத்தில் படைகள் சண்டை செய்யும். படைகளெல்லாம் போய்விடு என்று கூறினால் படைகள் போய்விடும்.
                    
 54. பாரடா நூலேணி மேலே யப்பா
    பாங்காக வெகுபடைகள் போகும் பாரு
சீரடா வெல்லார்க்குங் கண்ணிற் காணுஞ்
    சிறப்பாக யாவருமே புதுமை யென்பார்
கூரடா மையெடுத்துத் திலா்த மிட்டுக்
    குணமாக நீலகண்டி தியான மோது
ஆரடா அந்தரத்திற் சண்டையாக
    அடைவாகநீ நினைத்துக் குலவச் செய்யே.

விளக்கவுரை :

அடைவாகநீ நினைத்துக் குலவச் செய்யே. படைகள் போகும்போது அந்தரத்தில் நிற்கும் நூலேணியின் மேலே பெரும்படைகள் போகும். அது எல்லோருடையக் கண்களுக்கும் தெரியும். இதனைப் பார்பவா்கள் இது புதுமையான வித்தையொன்று புகழ்வார்கள். அதன் பின்னா் சிமிழிலுள்ள மையை எடுத்து திலகமிட்டுக் கொண்டு பயபக்தியுடன்  நீலகண்டி தியானம் செய்து  அந்தரத்தில் கடுமையான சண்டை நடக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்.
        
55. செய்யயிலே வானத்திற் முழங்க மெத்த
    செயலாக வான்பரிகள் கனைக்கும் பாரு
கையிலே வாளுடன் கதலிதண்டை வாங்கிக்
    கனிவாக மைபூசி வெட்டும் போது
ஐயமின்றிப் பொடிப் பொடியாய் வெட்டிவீசு
    ஆள்தலைகள் வருகுதென்பா ரறிந்து பாரு
மையிலே  கூழ்ப்  பாண்டந் தடவி வெட்ட
    மகத்தான ஆணையுட  தலை யென்பாரே.

விளக்கவுரை :

நீங்கள்  நினைத்தபடி ஆகாயத்தில் பெரும் முழக்கம் கேட்கும். குதிரைகள் கணக்கும். நீ வாளை கையில் எடுத்து கொண்டு, வாழைத் தண்டை எடுத்து மையை பூசி விட்டு வாளால்  வாழைத் தண்டை பொடிப் பொடியாய் வெட்டி வீசினால் ஆளின் தலையை வெட்டி வீசுவதைப் போன்று கீழே விழும். கூழ்பாண்டத்தில் மையைத் தடவி வெட்டினால் யானையின் தலைவந்து தரையில் விழும் .

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar